உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பர்மிங்காமில் நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் வெறுப்புக்கு உள்ளாயினர்.
இது குறித்து பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியதாவது:
இந்தியா, இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய விதத்தை எங்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறாதது பெறும் ஏமாற்றத்தைத் தந்தது. அப்படி நடந்திருந்தால், எங்களுக்கான கதவு திறந்திருக்கும்.
இன்றைய போட்டியில் நியூசிலாந்து, எங்களுக்காக இங்கிலாந்தை வீழ்த்தும் என நம்புகிறோம். நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தால் எங்களின் அரையிறுதி வாய்ப்பில் சிக்கல் எழும் என்று கூறியிருந்தார்.
அதற்கு ஏற்ப, இப்போது நியூஸிலாந்து அணியும் பாகிஸ்தான் பயிற்சியாளரை வெறுப்பேற்றி வருகிறது.
இன்றைய போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட் செய்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 305 ரன் எடுத்தது. இதை அடுத்து 306 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூஸிலாந்து தொடக்க ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. இந்தப் போட்டியும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு நகம் கடிக்கும் டென்ஷன் போட்டியாகவே அமைந்துவிட்டது.