வங்கதேச அணியுடன் மோதிய போட்டியில் ஆறுதல் வெற்றியுடன் உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான், வங்கதேச அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது
அதன்படி, களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே ரன் குவித்து அதிக ரன் எடுக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டியது. ஆனால், பகர் ஜமான் (13) சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, இமாம் உல் ஹக், பாபர் ஆசம் இருவரும் சிறப்பாக விளையாடினர். இருவரும் இணைந்து, இரண்டாவது விக்கெட்டுக்கு 157 ரன் சேர்த்தனர். பாபர் ஆசம் 96 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஹிட் விக்கெட் முறைஇல், இமாம் 100 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, ஹாரிஸ் சோகைல் – 6, ஷாதப் கான்- 1 சொதப்பினர். இமாத் வாசிம் 43 ரன் அடித்தார். 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன் எடுத்து, 316 ரன் என்ற வெற்றி இலக்கை வங்கதேச அணிக்கு நிர்ணயித்தது.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்ல வேண்டுமானால், வங்கதேச அணியை 7 ரன்களுக்கு ‘ஆல் அவுட்’ ஆக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இரண்டாவது ஓவரில் வங்க தேச அணி விக்கெட் இழப்பின்றி, 8 ரன் எடுத்து பாகிஸ்தானை ஏமாற்றியது.
வங்கதேச அணியில் தமிம்- 8, சவுமியா சர்கார்- 22 லிட்டன்- 32, சாகிப் -64 என ரன்கள் எடுத்தனர். இருப்பினும் பாகிஸ்தான் பந்து வீச்சில் மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க அந்த அணி 44.1 ஓவரில் 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.