சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
கடந்த மாதம் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்த அந்நாட்டு அரசு, கிரிக்கெட் தொடர்களை நிர்வகிக்க, இடைக்கால கமிட்டியைத் தேர்வு செய்திருந்தது. இதுபற்றி லண்டனில் நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அந்த நாட்டு கிரிக்கெட் அணிக்கு இடைக்கால தடை விதிக்க ஐசிசி முடிவு செய்தது.
இந்த தடையால், அந்நாட்டுக்கு ஐசிசியால் வழங்கப்பட்டு வந்த நிதி, நிறுத்தி வைக்கப்படும். மேலும் ஐசிசி நடத்தும் எந்தவித மான போட்டியிலும் ஜிம்பாப்வே அணியால் கலந்து கொள்ள முடியாது.
இதுகுறித்து பேசிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஷஷாங் மனோகர்,
‘ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் நடப்பது எந்த வகையிலும் ஐசிசியால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. ஐசிசி விதிமுறைகளை மீறிய செயல்கள் அங்கு நடக்கின்றன. அதனால் இந்த இடைக்கால தடை முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.