வேலூர்: குளிக்க போன கல்யாண பொண்ணு ஐஸ்வர்யாவை காணவில்லை.. கொஞ்ச நேரத்தில் தாலி கட்ட இருந்த மணப்பெண் மாயமானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியாத்தம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் விநாயகம். 24 வயதாகிறது. இவருக்கும், வெள்ளைக்குட்டை எனும் கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கும் இரு வீட்டு பெரியவர்களும் கல்யாணம் நிச்சயம் செய்திருந்தனர். நேற்று கல்யாண நாள்.
குடியாத்தம் மேல்பட்டி ரோட்டில் உள்ள முருகர் கோயிலில் இந்த கல்யாணம் நடக்க இருந்தது. இதற்காக இரு தரப்பு வீட்டில் இருந்தும் உற்றாரும் சுற்றாரும் என பலரும் மண்டபத்தில் கூடி இருந்தனர்.
காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் முகூர்த்த நேரம் ஆரம்பமானது. மணமக்கள் அலங்காரத்துடன் மேடைக்கு வந்தனர்.. தொடர்ந்து நலுங்கு வைக்கும் சடங்குகள், மந்திரங்கள் விறுவிறுவென நடந்து கொண்டிருந்தன.
பிறகு மணமக்கள் முகூர்த்த வேட்டி, சேலையை மாற்றி வரும்படி அவரவர் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மணமகன் முதல் ஆளாக வேட்டி-சட்டை அணிந்து கொண்டு வந்து மேடையில் உட்கார்ந்து விட்டார். ஆனால் சேலை மாற்றி வர சென்ற பெண்ணை வெகு நேரம் ஆகியும் காணவில்லை. முகூர்த்த நேரம் முடியப்போகிறது பெண்ணை சீக்கரம் கூட்டிட்டு வாங்க அப்படின்னு ஐயர் கூப்பிட, உட்கார்ந்து உட்கார்ந்து பார்த்த மணமகன் தரப்பினருக்கு லேசாக சந்தேகம் கிளம்பியது.
அதனால் பெண்ணை கொஞ்சம் சீக்கிரம் கூட்டிட்டு வாங்க என்று தெரிவிக்கவும், மணமகள் அறைக்கு குடும்பத்தினர் சென்று பார்த்தனர். கல்யாண பெண் ஐஸ்வர்யாவை காணவில்லை. போன் பண்ணினாலும் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது. அது கோயில் என்பதாலும், வேறு சில கல்யாணமும் அப்போது நடந்து கொண்டிருந்ததாலும் கூட்டம் வழிந்து காணப்பட்டது.
அதில் ஐஸ்வர்யா தப்பி சென்றுவிட்டாரா என தெரியவில்லை, ஏன் தப்பி சென்றார் என்றும் தெரியவில்லை.
ஆனால் கல்யாணம் நின்று விட்டது. சோகத்துடன் காணப்பட்ட மணமகள் வீட்டார், குடியாத்தம் டவுன் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர். கல்யாண வீட்டில் குளிக்க சென்ற மணமகள் ஐஸ்வர்யா மாயமானது பெரிய பரபரப்பை தந்துள்ளது.