சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில்ரமாணி ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் கொலீஜியத்தின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என தஹில்ரமாணி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் விடுத்த கோரிக்கையை கொலீஜியம் நிராகரித்தது.
இதனால் அதிருப்தியில் இருந்த தலைமை நீதிபதி தஹில் ரமாணி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். இதன் காரணமாக அவரது அமர்வில் பட்டியலிடப்பட்ட வழக்குகளை அவர் விசாரிக்கவில்லை.
கொலீஜியத்தின் பரிந்துரை மற்றும் தனது பதவி விலகல் கடிதத்தின் மீது குடியரசுத்தலைவர் முடிவெடுக்கும் வரை வழக்குகளை விசாரிப்பதில் இருந்தும், உயர் நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகளில் இருந்தும் விலகியிருப்பதாக அறிவித்து, அதன்படி தலைமை நீதிபதி தஹில் ரமாணி விலகியிருந்தார்.
இந்நிலையில் தஹில்ரமாணியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 15 நாட்களாக தலைமை நீதிபதி இல்லாமல் செயல்பட்டது. இதை அடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரியை ஜனாதிபதி ராம்நாத் நியமிக்க ஒப்புதல் அளித்தார்.
இதனால், மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஹில் ரமாணியின் பதவி விலகலை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆகக் குறைந்தது. தற்போது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான காலியிடங்கள் 18 ஆக அதிகரித்துள்ளது.