கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வயிற்றிலிருந்த நீர்கட்டியை குழந்தை எனக்கூறி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அடுத்து பெருமாள் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக குழந்தை இல்லை. எட்டு மாதத்திற்கு முன்பு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அஸ்வினியும் அவரது குடும்பமும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 8 மாதங்களாக மருந்து டானிக் என சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சை அளித்து வந்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் குழந்தை நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து குழந்தைக்கு தேவையான சக்தி கிடைக்க சத்து மாத்திரைகள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும் என அறிவுரையும் கூறியுள்ளனர்.
திடீரென அஸ்வினிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது .
இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையம் சென்று பார்த்தபோது அவர்கள் ஸ்கேன் செய்வதற்காக தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது அவரது வயிற்றில் இருந்தது குழந்தை இல்லை நீர்க்கட்டி என்பதை உறுதி செய்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அஸ்வினி உடனே தனது குடும்பத்தாரிடம் இந்த செய்தியை தெரிவிக்க ஆத்திரமடைந்த அவரது கணவர் அஸ்வினியை வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது உறவினர்கள் ஒன்று திரண்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கவன குறைபாட்டால் ஒரு பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது என அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார அலுவலர் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.