வெப்பச்சலனம் காரணமாக சென்னை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னை மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.. #ChennaiRains
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்…
தமிழகம் மற்றும் புதுவையில் பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைப் பொறுத்தவரை ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது…என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 7 சென்டிமீட்டர் மழையும், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, நாமக்கல் நகர் பகுதிகளில் தலா 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கோவை மேட்டுப்பாளையத்தில் 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
இந்நிலையில், சென்னை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சென்னையில் மீனம்பாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம், வேளச்சேரி, அனகாபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, கோட்டைமேடு, அரண்மனைமேடு, கண்ணார்பட்டி, கல்லுப்பட்டி, பசும்பொன் பகுதிகளிலும் மழை பெய்தது. இதேபோல், மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், திருநகர், கூத்தியார்குண்டு, வில்லாபுரம், நிலையூர் பகுதிகளில் கனமழை பெய்தது.