கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் கோவை வெரைட்டிஹால் ரோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி பேருந்து மூலம் பள்ளிக்கு சென்று வந்தார்.
கடந்த 17-ம் தேதி பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற 17 வயது சிறுமி மாயமானார். இது தொடர்பாக, அச்சிறுமியின் பெற்றோர் வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காணாமல் போனவர்கள் பிரிவில் வழக்குப் பதிந்து காவல்துறையினர் தேடினர். அதில், மாயமான சிறுமி இருக்கும் இடம் தெரியவந்தது. காவல்துறையினர் அந்த சிறுமியை மீட்டனர்.
விசாரணையில், தருமபுரி மாவட்டம் பெண்ணாகரத்தை சேர்ந்த சிவபிரகாஷ் (22) என்பவர் தற்போது தியாகி குமரன் மார்க்கெட் பகுதி அருகே வசித்து வருகிறார். இந்த இளைஞர் சில மாதங்களுக்கு முன்னர், அந்த சிறுமி வசிக்கும் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது அந்த சிவபிரகாஷூக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவில்லை.
இதையறிந்த சிவபிரகாஷ், ஆசை வார்த்தை கூறி தருமபுரிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார் எனத் தெரியவந்தது.
இது குறித்து காவல்துறையினர் கூறும்போது,”இளம் பெண்ணை திருமணம் செய்து, சிவபிரகாஷ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து இவ்வழக்கு மேற்கு மகளிர் காவல்துறைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் காணாமல் போனவர்கள் பிரிவில் இருந்து, போக்சோ பிரிவுக்கு வழக்கை மாற்றிப் பதிந்து சிவபிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்,” என்றனர்.