கடந்த 15-ம் தேதி பொங்கல் அன்று இரவு சுமார் 8 மணி அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கடையின் அருகே நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
காவல்துறையினர் விசாரணையில் கொல்லப்பட்டவர் அதேபகுதியைச் சேர்ந்த மதன்(வயது 26) என்பதும், 5 பேர் கொண்ட கும்பலால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
மேலும், மதனுக்கும் அதேத்தெருவை சேர்ந்த தசரதன் (வயது 30) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் தசரதன் உட்பட 5 நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அஸ்வினி என்ற பெண்ணை காதலித்து 7 ஆண்டுகளுக்கு முன் தசரதன் திருமணம் கொண்டார். ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில் தசரதனின் உறவுக்காரரான மதன் அடிக்கடி தசரதன் வீட்டிற்கு சென்றுவந்ததாக கூறப்படுகிறது. இதனால் மதனுக்கும் தசரதனின் மனைவி அஸ்வினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி அது தசரதனுக்கு தெரியவர இருவரையும் அவர் கண்டித்துள்ளார். இதனால் தசரதனுக்கும் அவரது மனைவி அஸ்வினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனிடையே அஸ்வினியும், மதனும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாயமானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்நிலையத்தில் தசரதன் மற்றும் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.காவல்துறையினர் இருவரையும் தேடிவந்தநிலையில் அஸ்வினி மேல்மருவத்தூரிலுள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஆஜராகி தனது கணவர் அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாகவும், அதனால் அவருடன் சேர்ந்துவாழ விருப்பமில்லை என்று கூறிவிட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.இந்த நேரத்தில் பொங்கலை கொண்டாட மதன் உத்திரமேரூர் சென்றுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட தசரதன் தனது நண்பர்கள் 4 பேர் உடன் சென்று மதனை வெட்டிக் கொலை செய்ததாக காவல்துறையினரின் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். பொங்கல் தினத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது