ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் பணியாற்றி வந்த வினிதா(24) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இவர்கள் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதற்காகப் பெற்றோர்களின் சம்மதம் கேட்டுள்ளனர்.
ஆனால், வினிதாவின் பெற்றோர் முத்துக்குமார் வேறு ஜாதி என்று கூறி திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுமட்டுமில்லாமல், வினிதாவை வீட்டிலேயே அடைத்து வைத்திருந்துள்ளனர்.
மேலும், என் பெண்ணை மணந்து கொண்டால் உன்னைக் கொலை செய்து விடுவேன் என்றும் முத்துக்குமாரை மிரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வினிதா வீட்டை விட்டு முத்துக்குமாருடன் சென்றுள்ளார். பின்னர், அவர்கள் இரண்டு பேரும் கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் பதிப்பகத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதனை எப்படியோ தெரிந்து கொண்ட வினிதாவின் உறவினர்கள் மீண்டும் முத்துக்குமாரை மிரட்டியுள்ளனர். அதனால் பதற்றமடைந்த வினிதா- முத்துக்குமார் ஜோடி காவல் ஆணையத்தில் தங்களைக் காப்பாற்றுமாறு தஞ்சம் அடைந்தனர்.
இதனிடையே வினிதாவின் பெற்றோர், மகளைக் காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, இரு தரப்பினரிடையேயும் பேச்சு வார்த்தை நடத்திய ஆணையர் அவர்களை புளியகுளம் காவல்நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.