கேன் குடிநீர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப் பட்டிருக்கிறது. இன்று மாலை 6 மணி முதல் வேலை நிறுத்தம் தொடங்கும் என்று, கேன் குடிநீர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக எழுந்த குற்றச்சாட்டில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் போராட்டம் அறிவிக்கப் பட்டிருக்கிறது.
அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உத்தரவிட்ட விவகாரத்தில், உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும், “மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைமை செயலாளரை ஆஜராக உத்தரவிட நேரிடும்” என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு மார்ச் 3க்கு தள்ளிவைக்கப் பட்டிருக்கிறது. இந்நிலையில், கடலூரில் ஓரே நாளில் 13 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
முன்னதாக, இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் சார்பில் மாவட்ட வாரியாக குடிநீர் ஆலைகள் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. உரிமம் பெறாத 132 ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பரிந்துரைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அறிக்கை அர்த்தமற்றது என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் 2018-ஆம் ஆண்டு நிலத்தடி நீரை எடுக்க ஆலைகளுக்கு உரிமம் வழங்க வகை செய்யும் அரசாணையை உறுதி செய்யவும், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததாகவும், அந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தவில்லை என்றும் கூறினர்.
இந்த வழக்கில் அனுமதியற்ற குடிநீர் ஆலைகளை மூட ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றி மார்ச் 3-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒட்டுமொத்த ஆலையை அல்லாமல் நிலத்தடி நீரை எடுக்கும் கிணறு அல்லது போர்வெல் பகுதியை மட்டும் மூடி சீல் வைக்க உத்தரவிட்ட நீதிபதிகள் உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் முறையாக செயல்படுத்தாவிட்டால், தமிழக அரசின் தலைமை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தனர்.