தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் சிங்காரத்தோப்பு சேர்ந்த தலைமை ஆசிரியர் அப்துல் ரகுமான்(51) கொரோனா தொற்றில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தவர். இவர் புதுதில்லி தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியர்.
விழுப்புரம் சிங்காரத்தோப்பு சேர்ந்த அப்துல் ரகுமான் (51), தில்லி தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். அவரது உடல் விழுப்புரம் சிங்காரத்தோப்பு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 67 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
அப்போது அவரிடம், கொரோனாவுக்கு தமிழகத்தில் 2ஆவது உயிரிழப்பா என விழுப்புரம் மரணம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என பதிலளித்துவிட்டார். ஏற்கெனவே தமிழகத்தில் கொரோனாவுக்கு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.