சேலத்தில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும், ஒருமணி நேரத்துக்கு ஒரு முறை கிருமிநாசினி தெளிக்க மாநகராட்சி ஆணையர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்ததாவது:
“சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று நோய் தடுப்புப் பணியாக தடை செய்யப்பட்ட பகுதிகளில் தினந்தோறும் 5 வேளை கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கக்கூடிய இடங்களைத் தவிர, வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்காக வந்து செல்கின்றனர். இதன் மூலமாகவும் பொதுமக்களுக்குக் கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க ஏடிஎம் மையங்களில் கிருமி நாசினி மருந்து தெளிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் தங்களுக்குச் சொந்தமான ஏடிஎம் மையங்களில் காவலர்களைக் கொண்டு தினந்தோறும் 1 மணிநேரத்துக்கு ஒரு முறை கிருமிநாசினி மருந்துகள் மூலம் சுத்தப்படுத்திட வேண்டும். அப்பொழுதுதான் தொற்று நோய் பரவாமல் தடுத்திட முடியும்.
மேலும், பணியிலுள்ள அனைத்துக் காவலர்களும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். ஏடிஎம் மையங்களுக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு கிருமிநாசினி மருந்து வழங்கி கைகளைச் சுத்தப்படுத்திய பின்னரே, ஏடிஎம் இயந்திரத்தினைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்.
மேலும், காவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்கள் மூலம் தொற்று நோய் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், சம்பந்தப்பட்ட வங்கிகள் உடனடியாக அனைத்து ஏடிஎம் மையங்களுக்கும் காவலர்களை நியமிக்க வேண்டும்.
அனைத்து வங்கிகளின் ஏடிஎம் மையங்களும், காவலர்கள் பாதுகாப்புடன் இயங்குகிறதா என்பதனைக் கண்காணிப்பதற்காக சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினரின் திடீர் தணிக்கையின்போது காவலர்கள் இல்லாமல் இயங்கும் ஏடிஎம் மையங்கள் கண்டறியப்பட்டால் உரிய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, சேலம் மாநகரப் பகுதிகளிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்றுநோய் தடுப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” இவ்வாறு சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்துள்ளார்.