கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அத்தியாவசிய பணிகளில் இருக்கும் நபர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. சென்னையில் 23 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவர்கள் குடும்பத்தினருடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில் நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளையும் கொரோனா மிரட்ட ஆரம்பித்துள்ளது. திருமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரின் காரை ஓட்டும் போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனால் அந்த இன்ஸ்பெக்டர் அவரது வீட்டில் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்பு பணியை மேற்பார்வையிட்ட அண்ணாநகர் துணை போலீஸ் கமிஷனர் நேற்று கொரோனா பாதிப்பில் சிக்கினார். அவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
அவரது குடும்பத்தினரும் சோதனை வளையத்தில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை டிஜிபி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தொழில்நுட்ப பிரிவில் ஒருவருக்கும், உளவுத்துறை கட்டுப்பாட்டு அறையில் 2 பேருக்கும், மோட்டார் வாகன பிரிவில் ஒருவரும் என 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, டிஜிபி அலுவலகத்தில் தற்போது வரை 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.