கொரோனா நோயாளிகளுக்கு வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் மூன்று நாளில் கொரோனா தொற்று நீங்கிவிடும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த பிறகு கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.
தற்போது சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் 50 சதவிகித இடங்கள் காலியாகவே இருக்கிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் கூறியிருந்தார். ஆனால், தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அமைக்க கல்லூரிகள், பள்ளிகள், சென்னை வர்த்தக மையம், திருமண மண்டபங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரொனா அறிகுறி இல்லாத ஆனால் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கண்காணிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களை கவனித்துக் கொள்வோரும் ஜிங்க் 20எம்.ஜி மாத்திரை, வைட்டமின் சி மாத்திரையை எடுத்துக்கொள்ள தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
மேலும், நிலவேம்பு கஷாயம், கபசுர குடிநீர் உள்ளிட்டவற்றையும் எடுத்துக்கொள்ள பரிந்துரைத்துள்ளது. 10 நாட்களுக்கு தொடர்ந்து இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. வீட்டிலேயே கொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தும் முடிவு கொரோனா தொற்றை அதிகரித்துவிடும் என்று மருத்துவர்கள் எச்சாக்கை விடுத்துள்ளனர்.