கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த 43 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதே போல டாஸ்மாக்கை திறக்கலாம் என அனுமதியளித்த நீதிமன்றம், உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இது குறித்து கடந்த 8 ஆம் தேதி எழுந்த அவசர வழக்கில் கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படாததால் டாஸ்மாக்குகளை மூட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. டாஸ்மாக்குகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்ற வீடியோக்களும் போட்டோக்களும் சமர்பிக்கப்பட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு, குடிமகன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ஆன்லைனில் மதுபானம் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்தது.
இருப்பினும் ஆன்லைனில் எப்படி வாங்குவது என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். அதனால் அதனை தெளிவு செய்யும் விதமாக, ஆன்லைனில் எப்படி மது வாங்குவது என்பதை விவரமாக பார்க்கலாம்..
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மொபைலில் உள்ள ப்ளே ஸ்டோரில் சென்று “டாஸ்மாக்” ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்.
அதில் உங்கள் பெயர், பாலினம், பிறந்த தேதி, உங்கள் மொபைல் எண், முகவரி மற்றும் அஞ்சல் ஐடியுடன் பதிவு செய்யுங்கள்.
நீங்கள் பதிவுசெய்ததும், உங்களுக்கு விருப்பமான ரகசிய குறியீடு எண்ணை உள்ளிட்டு அதை உறுதிப்படுத்தவும்.
ஆதார் அட்டையின் எண்ணையும், மேலும் கேட்கப்பட்டுள்ள சில தகவல்களையும் உள்ளிடவும். உங்களுக்கு விருப்பமில்லை என்றால் இதை தவிர்க்கலாம்.
அதன் பின்னர் நீங்கள் ஆர்டர் செய்ய விரும்பும் மதுபானங்களை ”Add money” என்னும் பகுதியில் சேர்க்க வேண்டும். ஆர்டர் செய்யப்பட்ட பானங்களுக்கான கட்டணத்தை செலுத்த “ஃபாஸ்ட் பே” என்பதை அழுத்த வேண்டும். பின்னர் நீங்கள் ஒரு QR குறியீட்டைப் பெறுவீர்கள். அந்த தரவு TASMAC ஊழியர்களின் செல்போன்களில் பதிவு செய்யப்படும், QR ஐ ஸ்கேன் செய்வதன் மூலம், ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் உங்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
மேலும், இந்த செயலி விரைவில் செயல்படத்தப்பட உள்ளதாகவும் இந்த பயன்பாடு சென்னையில் உள்ள 6 நவீன டாஸ்மாக் கடைகளில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறுகிய காலத்தில், அனைத்து டாஸ்மாக் கடைகளும் இந்த பயன்பாட்டு வசதியைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கிளப் மற்றும் ஸ்டார் ஹோட்டல்களிலும் இதனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.