கோவில்கள் மனிதனுக்கு நிம்மதியும், நம்பிக்கையும் கொடுப்பதாகும். மனிதர்கள் கடவுள் நம்பிக்கையை வைத்து வாழ்க்கையையே நடத்துகிறார்கள். மனிதனை எல்லா கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுவது கடவுள் நம்பிக்கைதான். ஆகவேதான், `கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
கொரோனா பயத்தில் இருந்தும் மக்களுக்கு நிச்சயம் வழிபாடு நல்ல நிம்மதியை கொடுக்கும். இந்துக்களுடைய வழிபாடு கூட்டு வழிபாடு கிடையாது. எனவே கோவில்களில் இந்துக்களை கட்டுப்படுத்துவது எளிதானது.
தமிழகத்தில் பெருங்கூட்டம் கூடும் கோவில்கள் (திருச்செந்தூர், பழனி, திருவண்ணாமலை, மதுரை), மிதமான கூட்டம் கூடும் கோவில்கள், தனியார் நிர்வகிக்கும் கோவில்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள கிராமக்கோவில்கள், நகரங்களில் உள்ள சிறுசிறு கோவில்கள், கிராமத்தில் உள்ள சிறிய தனியார் கோவில்கள், குலதெய்வ கோவில்கள் என கோவில்கள் பல வகையில் உள்ளன.
பெரிய கோவில்களைத் தவிர மற்ற கோவில்கள் கூட்டம் வருவது மிகவும் குறைவு. கிராமங்களில் உள்ள கோவில்களில் நாள் முழுவதும் 10 பேர்கூட வராத கோவில்களும் உள்ளன. சில தனியார் கோவில்கள் நிறைய தன்னார்வ கொண்டவர்களுடன் கட்டுப்பாடாக நடத்தப்படுகிறது.
அதனடிப்படையில் கிராமப்புற கோவில்களையும், கூட்டம் வராத நகர்புற கோவில்களையும் உடனே திறக்கலாம் . மிகப்பெரும் கோவில்களுக்கு சமூக கட்டுபாட்டுடன், சமுக இடைவெளியை பின்பற்றி கோவில்கள் திறக்கலாம். முடித்திருத்தும் கடைகள் திறப்பதில் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் அரசு இதிலும் பின்பற்றலாம். உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கலாம்.
எனவே, கோவில்கள் விஷயத்தில் அரசு ஒரு நல்ல பொருத்தமான முடிவை அரசு உடனே எடுக்கும் என்று பக்தர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
எனவே, தமிழக அரசு கோவில்களின் நிலைமையையும் அங்கு வரும் கூட்டத்தின் தன்மையையும் பொருத்து ஒரு நல்ல முடிவு எடுத்து கோவில்கள் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்து முன்னணி கோருகிறது. மேலும், மக்கள் மன உளைச்சல்களிலிருந்து விடுபட கோவில்கள் அவசியம்.
ஆகவே, கோவில்களை அரசு உடனடியாக திறக்காவிட்டால் வழிபடும் உரிமைகளை மீட்க வருகின்ற மே 26 ம் தேதி அனைத்து கோவில்களின் வாசலிலும் கற்பூரம் ஏற்றி, தோப்புக்கரணம் போட்டு வழிபாடு நடத்தும் போராட்டத்தை இந்து முன்னணி முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்… என்று தெரிவித்துள்ளார்.