திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமிக்கும், வேலூர் மாவட்டம், சித்தேரியை சேர்ந்த, 27 வயது கட்டட தொழிலாளிக்கும் கடந்த மாதம், 23ல் பாகாயத்தில் நடக்கவிருந்த திருமணத்தை, சமூக நல அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
சிறுமியை மீட்டு, கொரோனா பரிசோதனை செய்து, அரியூரில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுமிக்கு, 18 வயது பூர்த்தியாகாமல் திருமணம் செய்ய மாட்டோம் என, அவரது பெற்றோர் பத்திரத்தில் எழுதிக்கொடுத்தனர்.
இதனால், காப்பகத்திலிருந்து வீட்டுக்கு அழைத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பெற்றோர், சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், செய்யாறில் உள்ள கட்டட தொழிலாளி வீட்டில், விட்டுச் சென்றனர்.
இந்நிலையில், சிறுமிக்கு கொரோனா உறுதியானது. தகவலின்படி, வேலூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் ஏற்பாட்டில், அங்குள்ள சுகாதாரத்துறையினர் சிறுமியை மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தின் போது, இரு வீட்டார் தரப்பில், 120 பேர் பங்கேற்றனர். அவர்களின் பட்டியல் தயாரித்து, கொரோனா பரிசோதனை செய்ய, அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.