பேய் கூப்பிடுதுன்னு 4 நாளைக்கு முன்பு ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார். இப்போது “சிவன் என்னை கூப்பிடுகிறார்” என்று இளைஞர் மலைமேல் உள்ள மரத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அழுகிய நிலையில் அந்த உடல் மீட்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன்.. 24 வயதாகிறது லாக்டவுனில் இவ்வளவு நாள் வீட்டிற்குள்ளேயே இருந்தவர், 5 நாளுக்கு முன்புதான் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதற்கு பிறகு வீட்டிற்கு திரும்பவும் இல்லை.
பல இடங்களில் மகனை காணோம் என்று பெற்றோர் தேடினர். கடைசி வரை கிடைக்காததால், போலீசில் புகார் தந்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசாரும் தேடி வந்தனர்.
இந்நிலையில், வெள்ளிங்கிரி 7வது மலையில் உள்ள ஒரு மரத்தில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார் மகாதேவன். ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் அந்த மலைமீது ஏறி சென்றபோது, மரத்தில் மகாதேவன் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கும், ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் சொன்னார்கள்.
அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர். அப்போது மகாதேவன் பாக்கெட்டில் ஒரு லெட்டர் இருந்ததை கண்டெடுத்தனர். அதில், “அப்பா, அம்மா, என்னை மன்னிச்சிடுங்க. சிவன் என்னை கூப்பிட்டுட்டே இருந்தார். அவரிடம் போகிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. நீங்கள் நிம்மதியாக இருங்க” என்று எழுதி வைத்திருந்தார்.
இந்த லெட்டரின் அடிப்படையில் போலீசார் தொடர் விசாரணையில் இறங்கினர். தற்கொலைக்கு 5 நாளுக்கு முன்பு காரமடையில் வசிக்கும் தன்னுடைய அண்ணனின் செல்போன் நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதிலும், “நான் சிவன்கிட்ட போறேன். குடும்பத்தை பார்த்துக்கோ” என்று தெரிவித்திருந்தார்.. இதையடுத்து, அவர்கள் உடனடியாக மகாதேவனுக்கு போன் செய்துள்ளனர். ஆனால் ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது.
மகாதேவனுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்று ரொம்ப ஆசையாம். அதற்காக முயற்சியும் செய்து வந்திருக்கிறார். இதற்கான தேர்வு எழுத அழைப்பும் வந்துள்ளது. அதற்கான அந்த லெட்டரைகூட பாக்கெட்டில்தான் மகாதேவன் வைத்திருந்தார். அண்ணனுக்கு மெசேஜ் செய்து 5 நாள் ஆனதால், அநேகமாக அன்றே அவர் இறந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மகாதேவன் சடலம் அழுகி போய் இருந்ததாம்.
எதற்காக மகாதேவன் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்தாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்பது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.