ஓராண்டாக நிறுத்தப்பட்டிருந்த காரின் உள்ளே சென்று விளையாடி 2 சிறுமிகள் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் குலதீபமங்கலம் உள்ள பாரதியார் தெருவில் ராஜா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மாருதி ஷிப்ட் கார் ஒன்றை கடந்த ஓராண்டுக்கும் மேலாக வீட்டின் அருகே நிறுத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில் அதே தெருவை சேர்ந்த அய்யனார் என்பவரின் 3 வயது மகள் வனிதா, ஏழுமலை என்பவரது 7 வயது மகன் ராஜி ஆகியோர் காரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கார் கதவுகள் மூடிக்கொண்டதால் இருவரும் வெளியே வர முடியாமல் காரிலேயே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தவித்துள்ளனர். இதனால் மூச்சுத் திணறி இருவரும் காரிலேயே உயிரிழந்துள்ளனர்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காரை உடைத்து குழந்தைகளை வெளியே எடுத்து திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, சிறுமிகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் பெற்றோர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து மணலூர்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் சிக்கி சிறுமிகள் இரண்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.