சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் வடிவேல், ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் கடந்த 5 ஆண்டுகளாகக் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். எனது ஃபேஸ்புக்கிலிருந்து என்னுடைய செல்போன் நம்பரை எடுத்து என்னை ஒருவர் ஒருவர் தொடர்புகொண்டார்.
தனக்கு 5 லட்சம் ரூபாய் தர வேண்டும் இல்லையெனில் உங்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவேன் போலீஸுக்குச் சென்றால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டினார். 9.6.2020 அதிகாலையில் என் வீட்டுக்கு வந்தான். நான் பயந்து போய் என் மகளின் மூன்றரை சவரன் வளையல், ஒன்றரை சவரன் செயின் முக்கால் சவரன் கம்மல் என 42 கிராம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொடுத்தேன்.
என்னைத் தொடர்ந்து அவன் மிரட்டி வருகிறான். எனவே, மேற்படி நபர் மீது நடவடிக்கை எடுத்து அவனிடம் உள்ள தங்க நகைகளை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின்பேரில் ஜெ.ஜெ.நகர் போலீஸார், வடிவேலை மிரட்டியது யார் என்று விசாரித்தனர். விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த ஆல்வின் (20) எனத் தெரியவந்தது. டிப்ளோமா இன்ஜினீயரிங் படித்து வருகிறார். அதையடுத்து அவரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்தநிலையில், ஆல்வினை பிடித்த போலீஸார் அவனிடமிருந்த தங்க நகைகளை மீட்டனர். அவரிடம் விசாரித்தபோது, விலை உயர்ந்த பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை நீண்டகாலமாக எனக்கு இருந்தது.
ஆனால், பணம் இல்லை. அதனால்தான் ஃபேஸ்புக் மற்றும் சமூகவலைதளங்களில் வசதியானவர்களைக் குறிவைத்து அவர்களின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து செல்போன் நம்பருக்கு அனுப்புவேன். அதைப்பார்த்து பயப்படுபவர்களிடம், முடிந்தளவுக்கு பணம் நகைகளை பறிப்பேன் என்று கூறியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “வடிவேல் பிசினஸ் செய்து வருகிறார். ஃபேஸ்புக்கில் ஆக்டிவ்வாக இருந்துள்ளார். மேலும், தன்னுடைய புகைப்படங்களை அதில் பதிவு செய்துள்ளார். வடிவேலின் புகைப்படங்களை எடுத்த ஆல்வின் அதை மார்பிங் செய்து அவருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகுதான் வடிவேலிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார் ஆல்வின். ஆல்வினிடம் விசாரணை நடந்துவருகிறது” என்றனர்.
அவரைக் கைது செய்த போலீஸார் கொரோனா மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.