தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72), விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே உள்ள வயலில் மின்வேலி அமைத்து இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வனத்துறையினர் 5 பேர் முத்துவை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனை அறிந்ததும் அவரது மகன் நடராஜன் மற்றும் உறவினரும் சேர்ந்து சிவசைலத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
சிவசைலம் ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது எதிரே வனத்துறை அலுவலர்கள் ஜீப்பில் அணைக்கரை முத்துவை அழைத்து வந்தனர். அவரிடம் மகன் நடராஜன் விசாரித்தபோது உடல்நிலை சரியில்லை என்று கூறினாராம். இதையடுத்து அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்தபோது, அணைக்கரை முத்து இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில் குற்றவியல் நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைத்ததையடுத்து குற்றவியல் நீதிபதி கார்த்திகேயன் விசாரணையில் ஈடுபட்டார். மேலும், சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் , நிவாரணமாக 50 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்று கூறி இன்று மூன்றாவது நாளாக உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வனத்துறை விசாரணைக்கு சென்று உயிரிழந்த விவசாயி முத்துவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். முத்துவின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்