சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திருமணமான ஒரு மாதத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற இளம் இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தார்.
மானாமதுரை அருகே கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி மகன் அஜித் (24), இந்திய ராணுவத்தில் படைவீரராக பணியாற்றி வரும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்திருந்தார்.
அப்போது அருகே வி.கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந் நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு கல்குறிச்சி கிராமத்திலிருந்து அஜித் தனது பைக்கில் மானாமதுரைக்கு வந்தார்.
வைகையாற்றின் குறுக்கேயுள்ள சிவகங்கை பைபாஸ் மேம்பாலத்தில் வந்தபோது அந்தவழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அஜித் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் பைக்கிலிருந்து தூக்கிவீசப்பட்ட அஜித் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது உடல் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த விபத்து குறித்து மானாமதுரை காவல்துறையினர் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர். இதற்கிடையில் காதல் விவகாரத்தில் அஜித்தை விபத்தை ஏற்படுத்தி யாராவது கொலை செய்திருக்கலாமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.