கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் பணிக்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களுக்கு, கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப் படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக் கப்பட்ட பிறகு, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் பணிக்காக தமிழக அரசால் சுகாதார ஆய்வாளர் (நிலை-2) பதவியில் ஏப்ரல் மாதம் 324 பேர், மே மாதம் 2,715 பேர் என மொத்தம் 3,039 பேர் நியமிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு `அவுட்சோர்சிங்’ அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் சம்பளம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும், 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து புதிதாக நியமிக்கப் பட்ட சுகாதார ஆய்வாளர்கள் கூறும் போது, “ஏற்கெனவே பார்த்து வந்த தனியார் வேலையை உதறிவிட்டு, பேரிடர் மேலாண்மைப் பணியில் ஈடுபட்டோம். மாதம் ரூ.27,000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு, ஒரு மாதம் மட்டுமே சம்பளம் வழங்கப் பட்டது.
மற்ற இரு மாதங்களுக்கான சம்பளம் இதுவரை வழங்க வில்லை. இதுகுறித்து சுகாதாரத் துறையினரிடம் கேட்டால், நிதி வந்ததும் வழங்கப்படும் என்கின்றனர். கொரோனா பரிசோதனைக்கான ஸ்வாப் பரிசோதனை மேற்கொள்வது, பாதிக்கப்பட்டவரைக் கண்டறிந்து, அவரை மருத்துவ மனைக்கு அழைத்து வருவது, அவரையும், அவரது குடும்பத் தாரையும் தொடர்ந்து கண் காணிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நாங்கள், குடும்பத்தை விட்டுப் பிரிந்து, வெளியே அறை எடுத்து தங்கியுள்ளோம். எங்களைச் சேர்ந்த சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இப்பணியில் திருப்பூர் மாவட்டத்தில் 42 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். இதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் 40 பேர் முதல் 100 பேர் வரை நியமிக்கப் பட்டுள்ளனர். ஆட்கள் பற்றாக்குறை யால் கடும் பணிச்சுமையுடன் பணியாற்றுகிறோம்.
ஆபத்தான பணியில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு உடனடியாக நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். அதேபோல, தொகுப்பு ஊதியத்தில் அரசுப் பணியில் நியமிக்க வேண்டும்” என்றனர்.
திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜெகதீஷ் குமார் கூறும்போது, “இரண்டு மாத சம்பள பாக்கி, நிதி வந்ததும் வழங்கப்படும்” என்றார். திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் கூறும்போது, “இது தொடர்பாக விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.