ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் தங்கத் தேரோட்டம் புதன்கிழமை காலை 6.05 மணிக்கு கோயில் வளாகத்திற்குள்ளேயே நடைப்பெற்றது.
ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் பிறந்ததால், ஒவ்வொரு ஆண்டும் அன்றைய தினம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தங்கத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
ஆனால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்தாண்டைப் போல இந்தாண்டும் கோயில் வளாகத்திலேயே தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது.
அதன்படி, இந்தாண்டுக்குரிய தேரோட்டம் நிகழ்ச்சிகள் கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஆண்டாள் ரெங்கமன்னார் பல்வேறு அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.
கோயில் வளாகத்திலேயே பல்வேறு புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தங்கத் தேரோட்டம் ஆண்டாள் பிறந்த பூரம் நட்சத்திர தினமான இன்று புதன்கிழமை நடைபெற்றது.
இதற்காக கோயிலில் இருந்து அதிகாலை ஐந்தரை மணி அளவில் ஆண்டாள், ரெங்கமன்னார் மேளதாளங்கள் முழங்க தங்கத் தேருக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் தங்கத்தேரில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
பின்னர் 6:20 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சார் ஆட்சியர் பிரிதிவிராஜ், நகராட்சி ஆணையர் மல்லிகா, டிஎஸ்பி நமச்சிவாயம், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ், தேரோட்டி பாலகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் கணேசன், மாவட்ட சேர்மன் வசந்தி மான்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை, தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், பட்டர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.