தனது கணவரோடு திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் பெண் காவலரை தகுந்த ஆதாரத்தோடு மாட்டிவிட நினைத்த பெண், அந்த பெண் காவலரின் காக்கி உடுப்பை எடுத்து வந்து, கரூர் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் மாவட்டம், செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்தி, இவரது மனைவி வனிதா. காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு, 6 வயதில் மகள் ஒருவர் உள்ளார். கார்த்தி, கரூர் செங்குந்தபுரம் பகுதியில் செல்போன் விற்பனை, ரீசார்ஜ் கடை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கரூர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் கௌசல்யா என்பவருடன் கார்த்தி திருமணம் தாண்டிய உறவில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனை வனிதா பலமுறை கண்டித்தும், இருவருக்கும் உறவு தொடர்ந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், கோபமான வனிதா, ‘எனது கணவர் நடத்தும் கடையில் கௌசல்யா, எனது கணவரோடு இருந்தபோது, கௌசல்யாவின் உடையை எடுத்து வந்துவிட்டேன்.
இந்தாங்க ஆதாரம். கௌசல்யா மீது நடவடிக்கை எடுங்க’ என்று கரூர் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்திருக்கிறார். ‘விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எஸ்.பி உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வனிதா, “நானும், என் கணவரும் காதலித்து திருமணம் பண்ணிக்கிட்டோம். என்மீது அவ்வளவு உயிரா இருப்பார். இந்த நிலையில்தான், ஒரு வருஷத்துக்கு முன்னாடி என்னோட கணவர் கடையில் ரீசார்ஜ் பண்ண வந்த கௌசல்யாவுக்கும், என் கணவருக்கும் உறவு ஏற்பட்டிருக்கிறது.
ஒருகட்டத்தில் அந்த விஷயம் எனக்கும் தெரிந்தது. என் கணவரை கண்டித்தேன். ஆனால், கௌசல்யாதான் என் கணவரை மயக்கி வைத்திருக்கிறார்னு தெரியவந்தது.
அதனால், ஒருவருஷத்துக்கு முன்னாடியே கௌசல்யாகிட்ட, ‘என் கணவரை என்கிட்ட கொடுத்திரு’னு சொன்னேன். ஆனால், அதுக்கு கௌசல்யா மறுத்துட்டாங்க. அதனால், எஸ்.பி அலுவலகம் வரை புகார் கொடுத்தேன். ‘இனி, கார்த்திக்கோடு உள்ள தொடர்பை துண்டிச்சுக்கிறேன்’னு கௌசல்யா சொன்னதால், அவரை கண்டிச்சு விட்டாங்க.
ஆனால், கொஞ்ச காலம் கழித்து மறுபடியும் இரண்டு பேருக்கும் இடையில் உறவு வளர்ந்தது. கௌசல்யாவுக்கும் திருமணமாகி, குழந்தை இருக்கு. இந்த நிலையில், என்னை எங்க அம்மா வீட்டுக்கு அடிச்சு துரத்திட்டாங்க.
என் கணவரும், கௌசல்யாவும் என் கணவரோட கடையில் இரவில் தங்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால், கௌசல்யாவை ஆதாரத்தோட மாட்டிவிடுவதற்காக, என்னோட கணவர் கடைக்குப் போனேன்.
அப்போ, கடைக்குள் கௌசல்யாவின் காக்கி உடை இருந்தது. அதை எடுத்துகிட்டு வந்துட்டேன். உடனே, கௌசல்யா என் வீட்டுக்கு வந்து, ‘என் உடையை ஒழுங்கா கொடுத்திரு’னு கேட்டாங்க. நான் மறுத்துட்டு, ‘என் கணவரை விட்டிரு. நான் உன் உடையை தர்றேன்’னு சொன்னேன். இதுல ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் நடந்தது.
கோபத்துல கௌசல்யா, ‘ஒரு போலீஸூகிட்டே உன்னோட வேலையை காட்டுறியா?’னு என்னை அடிச்சு கீழே தள்ளிட்டாங்க. என் கணவரும், என்னோட அம்மா முன்னாடி என்னை அடித்தார். அதனால், அவங்க உடையை எடுத்துட்டுப் போய் அன்னைக்கே தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனா, அவங்க நடவடிக்கை எடுக்கலை.
அதனால்தான், இன்னைக்கு கௌசல்யாவோட உடையோடு வந்து, மாவட்ட எஸ்.பிகிட்ட புகார் கொடுத்திருக்கிறேன். நடவடிக்கை எடுக்கிறதாக சொல்லியிருக்காங்க. கௌசல்யா மீது நடவடிக்கை எடுத்து, என் கணவரை மீட்டுத் தரலன்னா, இங்கே வந்து குடும்பத்தோடு தற்கொலை பண்ணிக்குவோம்” என்றார் அழுதபடி.
தனது கணவரோடு திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் பெண் காவலரின் உடையோடு வந்து பெண் ஒருவர் எஸ்.பியிடம் புகார் கொடுத்துள்ள சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.