ஒலி, காற்று மாசுபடுவதை குறைக்க பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க தமிழகத்தில் மாவட்ட நிர்வாகங்கள் வலியுறுத்தி வருகின்றன.
தீபாவளி திருநாள் வரும் அக்24ல் வரும் நிலையில் இப்போதே மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசால் சிறுகுழந்தைகள், வயதான பெரியவர்கள், வயோதிகர்கள், உடல் அளவிலும், மனதளவிலும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. பசுமை பட்டாசுகள் பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலசங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுதலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மாசற்ற தீபாவளியை கொண்டாட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.என அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வலியுறுத்தி வருகின்றனர்.
