
வானிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கோடைமழை பெய்துவரும் நிலையில் தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்குத்திசையில் காற்று சந்திப்பு நிலவுகிறது. இந்த வானிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கோடைமழை பெய்துவருகிறது.
இதனை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இன்று மற்றும் நாளையும்ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் கடந்த ஓரிரு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் சற்று தணிந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் இன்று அதிகாலை காற்றுடன் கூடிய மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், சென்ட்ரல் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் அதிகாலை மழை பெய்து வருகிறது.