கன்னியாகுமரி விரைவு ரயிலை கவிழ்க்க நடந்த சதி குறித்து இப்போது விசாரணை தீவிரப் படுத்தப் பட்டுள்ளது .திருச்சி அருகே நடந்தது என்ன என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அருகே தண்டவாளத்தின் நடுவே லாரி டயர்களை வைத்துச் சென்ற மர்ம நபர்களால், கன்னியாகுமரி விரைவு ரயிலில் பழுது ஏற்பட்டு நின்றது. ரயிலைக் கவிழ்க்க சதித் திட்டம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரியில் இருந்து கன்னியாகுமரி – சென்னை விரைவு ரயில் (12643) ஜூன் 1ம் தேதி மாலை 5.20க்கு வழக்கம் போல் சென்னைக்கு புறப்பட்டது. திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு வந்த ரயில், பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. கொள்ளிடம் பாலம் கடந்து, பிச்சாண்டார் கோவில் – வாளாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தின் நடுவே 2 பெரிய லாரி டயர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்றார். அதிவேகத்தில் ரயில் வந்து கொண்டிருந்ததால், டயர்கள் மீது ஏறியது. பின்னர் ரயில் சக்கரத்தில் லாரி டயர்கள் சிக்கி ரயில் நடுவழியில் நின்றது. மோதிய வேகத்தில் என்ஜினில் இருந்த குழாய் பழுதடைந்தது. இதனால் ரயிலை மேலும் இயக்க முடியவில்லை.
நள்ளிரவு 1.05 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. பின்னர் பழுது நீக்கப்பட்டு, சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக 1.45 மணிக்கு ரயில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிவண்ணன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்தச் சம்பவம் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 31ஆம் தேதி லால்குடி அருகே மேல வாளாடி ரயில்வே தண்டவாளம் அருகே, பாலத்தின் கீழ் சாலைப் பணிக்காக ஜேசிபி மூலம் குழி தோண்டி உள்ளனர். அப்போது மணலுக்கு அடியில் இருந்த ரயில்வே டிராக் சிக்னல் கேபிள் பழுதடைந்ததால் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை.
இது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி, ஜேசிபி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவ்விவகாரத்தில் மேல வாளாடியை சேர்ந்த நான்கு பேர், ரயில்வே போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. எனவே அவர்களுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என ரயில்வே போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அல்லது, ரயிலை கவிழ்க்கும் சதித் திட்டத்தில் மர்ம நபர்கள் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்திலும், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தென் மாவட்டங்களுக்கான விரைவு ரயில்கள் செல்லும் வழித்தடத்தில், விபத்தை ஏற்படுத்தும் நோக்கில் மர்ம நபர்கள் லாரி டயர்களை வைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் கேரளத்தில் ரயிலுக்கு தீ வைப்பு, வந்தே பாரத் ரயில்கள் மீது தொடர் கல்வீச்சுத் தாக்குதல்கள் என ரயில்களை மையமாக வைத்து மர்ம நபர்களின் தாக்குதல்கள் இருப்பதால், ரயில்வே போலீஸார் இதில் கூடுதல் கவனம் கொடுத்து விசாரணையை முடுக்கி விட வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.