நாகை மாவட்டம். சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் அ.தி.மு.க. பிரமுகரும், காண்ட்ராக்ட்டருமான எடமணலைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ்பாபு வெடிகுண்டு வீசி வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளார். காரில் வந்து கொலை செய்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் சீர்காழியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது!
நாகை மாவட்டம் சீர்காழி திரிபுரசுந்தரி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு(45). அதிமுக கொள்ளிடம் ஒன்றிய மாணவரணி செயலாளர். மேலும் கான்ராக்டர் தொழிலிலும் ஈடுபட்டு வந்த இவர் அதிமுகவின் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் மற்றும் எஸ்பி வேலுமணிக்கு நண்பராகத் திகழ்ந்தார்.
இந்நிலையில் இன்று முற்பகல் 11:30 மணி அளவில் சீர்காழி வடக்கு வீதியில் உள்ள கான்ராக்டர் வீட்டுக்குச் சென்று விட்டு காரில் ஏறும் போது, வேறு ஒரு காரில் வந்த மர்ம கும்பல் ரமேஷ்பாபுவை அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டு வீசியும் சென்றுள்ளனர். இதில் தலை முற்றிலும் சிதைந்த நிலையில் ரமேஷ்பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த சீர்காழி டிஎஸ்பி சேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷ்பாபு உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரமேஷ்பாபு பயன்படுத்திய கைதுப்பாக்கி, செல்போன் ஆகியவற்றையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரகேஷ்பாபு கொலை குறித்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும் இக்கொலை தொழில் விரோதம், அல்லது அரசியல் விரோதத்தினால் நடைபெற்றதா எனவும் விசாரணை நடைத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் கலவரம் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட ரமேஷ்பாபுவுக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். சீர்காழி நகரில் பட்டப் பகலில் நடைபெற்ற இக்கொலைச் சம்பவத்தால் அங்கே பதற்றம் ஏற்பட்டுள்ளது.