சென்னை: கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பொங்கல் விடுமுறை 6 நாட்களை அடுத்து, கடந்த 9 நாட்களாக, போராட்டம் நடத்தி வந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கொண்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தற்போது பொதுமக்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், திமுக., அரசு அமைந்ததும், அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும், எனவே திமுக., அரசு அமையும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பினருக்கு அன்புக் கட்டளை இட்டார். இதை அடுத்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 22-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்! பொங்கல் நாள் விடுமுறைகளையும் சேர்த்தால், 15 நாட்களுக்கும் மேலாக அவர்களால் பள்ளிகள், மற்றும் அரசுப் பணிகள் எதுவும் நடைபெறாமல் பாதிக்கப் பட்டிருந்தன.