பொள்ளாச்சியில் இளம்பெண்கள் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துன்புறுத்தப் பட்ட வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி டிகே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பேஸ்புக் மூலம் அணுகி, அவர்களை மயக்கி, காதலிப்பதாகக் கூறி, ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. தங்களிடம் சிக்கிய பெண்களை வீடியோ எடுத்து அதனைக் காட்டி மிரட்டியே பணம் பறித்தது அந்த கும்பல். அந்த கும்பலிடம் சிக்கிய இளம்பெண் ஒருவர் துணிச்சலாக வெளியில் வந்து, புகார் அளித்ததன் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக அந்த கும்பல் ஒப்புக் கொண்ட நிலையில் அது தொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், எனவே தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப் பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்து கொண்ட தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு, வழக்கு தொடர்பான ஆவணங்கள், சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
மேலும், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகியுள்ள திருநாவுக்கரசு மீதும் மற்ற மூவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு முன்னர் கைது செய்யப் பட்ட மூவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.
இதனிடையே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும் என்றும், அப்போதுதான் உண்மைக் குற்றவாளிகள் சிக்குவர் என்றும், தேர்தல் நேரம் என்பதால் திமுக., தரப்பினர் தங்களது ஊடகங்கள் மூலம் மேற்கொண்டிருக்கும் அரசியல் லாப சூழ்ச்சிகள் வெளியே வரும் என்றும், தேர்தலுக்கு முன்னதாக இந்த வழக்கின் விசாரணை முடிந்து தகவல் வெளியாக வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.