தூத்துக்குடி, மதுரை, கரூர், மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படை ஆய்வு தொடரும் என்று தெரிவித்துள்ளார் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ.
தேர்தல் நடந்து முடிந்த 28 மாவட்டங்களில் பறக்கும் படை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது என்று கூறிய சத்யபிரதா சாகு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப் படுவதாகவும், வேட்பாளரின் முகவரும் 24 மணி நேரமும் இருக்கலாம் என்றும் கூறினார்.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம் குறித்து கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி நேரில் விசாரணை நடத்தி இன்று அறிக்கை அளிப்பார் என்று கூறிய அவர், 4 தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பில் 13 கம்பெனி துணை ராணுவத்தினர் ஈடுபடுவார்கள் என்றார்.
அனைத்து மாவட்ட வாக்கு எண்ணும் மையத்திற்கும் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், பொன்பரப்பி சம்பவம் குறித்த திருமாவளவனின் புகார் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் கூறினார் சத்யப்ரதா சாஹூ.
இதனிடையே, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மதுரையில் அனைத்து கட்சி வேட்பாளர்களுடனும் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி சந்தித்துப் பேசினார். வாக்கு இயந்திர மைய அறைக்குள் பெண் வட்டாட்சியர் நுழைந்தது தொடர்பாக வேட்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் வேறொரு நிகழ்வாக, மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி புகார் அளிக்கப் பட்டுள்ளது. சென்னை பெரம்பூர், சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 168வது வார்டில், மறுவாக்குப் பதிவு நடத்தக் கோரி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்ஷினி புகார் அளித்தார். 168வது வார்டில் பணப்பட்டுவாடா நடந்ததாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.