இப்போது கமல் வந்த வாகனத்தின் மீது செருப்பு வீசியவர் குறித்து பேசப் படுகிறது. அத்துடன் அவர் வீசியது ஒரு செருப்பா, இரண்டு செருப்பா என்பது குறித்தும் விவாதிக்கப் பட்டு வருகிறது. காரணம், இன்னொரு செருப்பு இருந்தா அதையும் வீசுங்க, பயன்படும் என்று செருப்பு கலெக்ட் செய்பவர் போல் கமல் பேசியிருப்பதுதான்!
கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் வந்த வாகனம் மீது நடந்த செருப்பு வீச்சால் கடந்த இரு தினங்களாக பரபரப்பு நிலவுகிறது.
அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜூக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ந்தேதி பள்ளப்பட்டி என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன்” என கூறினார்.
அவர் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசனின் கருத்துக்கு பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கட்சிகளும் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில் கமல் மீது அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கக் கோரி பாஜக சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, இந்து தீவிரவாதம் குறித்து பேசிய விவகாரத்தில் முன் ஜாமின் கோரி கமல்ஹாசன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் சரவணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்க நீதிபதிகள் இன்று மறுப்பு தெரிவித்தனர்.
தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதனால் தேர்தல் பிரசாரம் தொடர்பான முடிவுகளை தேர்தல் ஆணையம்தான் எடுக்க வேண்டும். இந்த மனுவை நாங்கள் விசாரணை மேற்கொள்ள இயலாது என நீதிபதிகள் கூறிவிட்டனர். மேலும் நாளை சூலூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கரூரில் வேலாயுதம்பாளையம் பகுதியில் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் ஹாசன் மீது நடந்த செருப்பு வீச்சு தாக்குதலால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சினேகன் மற்றும் தொண்டர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் கலைந்து சென்றனர்.
இதனிடையே, கமல் வந்த வாகனம் மீது செருப்பு வீசிய பாஜக., பிரமுகர் தொண்டர்களால் ரவுண்டு கட்டப் பட்டார். தொடர்ந்து அவர் கைது செய்யப் பட்டார்.
இந்நிலையில், செருப்பு வீசியதற்கே ஒரு நபரைப் பிடித்து, நூற்றுக்கும் மேற்பட்ட குண்டர்கள் தாக்குகிறார்கள் என்றால், யார் தீவிரவாதி என்று கேள்வி எழுப்புகின்றனர் நெட்டிசனஸ்.
செருப்பு வீசினார் என்றால், அவரைப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டு, அமைதியாக கலைந்து சென்றிருக்க வேண்டும், அதை விடுத்து, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து கொலைவெறித் தாக்குதல் நடத்துவீர்கள் என்றால், யார் தீவிரவாதி, நீங்கள்தானே! அதிலென்ன பின்னர் கோட்சேவை தீவிரவாதி என்று கூறுவது என சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்புகின்றனர்.
இதனால் முழித்துக் கொண்ட கமல், உடனே நம்மை வன்முறைக்கு இழுப்பார்கள், அதில் மயங்கி வன்முறையைக் கையில் எடுக்காதீர் என்று அட்வைஸ் செய்தார். ஆனால் அவரே பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, என்னைக் கைது செய்தால், தேவையற்ற பதற்றம் எழும் என்று அரசாங்கத்தையே மிரட்டினார்.