சென்னை: மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் முன்ஜாமீன் மனு மீது திங்கள் கிழமை அன்று தீர்ப்பு வழங்குகிறது உயர் நீதிமன்ற மதுரை கிளை.
நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர் பெயர் கோட்சே என்று பேசினார். இஸ்லாமியர்கள் நிறைந்த பள்ளப் பட்டி பகுதியில் பிரசாரம் செய்த போது கமல் கூறிய கருத்து மத ரீதியாக பிளவினை ஏற்படுத்துவது போல் உள்ளதாக அவர் மீது புகார் தெரிவிக்கப் பட்டது.
இதை அடுத்து, கமல் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. மேலும், பல்வேறு தரப்பினர் காவல் நிலையங்களில் புகார் கொடுத்திருந்தனர். பல்வேறு காவல் நிலையங்களிலும் சேர்த்து கமல்ஹாசன் மீது 76 புகார்கள் அளிக்கப் பட்டிருப்பதாக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நடிகர் கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவர் தாக்கல் செய்த மனுவுக்கு உடனே தீர்ப்பு வழங்காமல் ஒத்திவைத்தது நீதிமன்றம். இந்த மனு மீது வரும் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப் படலாம் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், திங்கள் கிழமை தீர்ப்பு அளிக்கப் படும் என்று கூறப் படுகிறது.