கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா நாளை விருந்து அளிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தில்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சார்பில் நாளை தில்லியில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் நாளை அமித்ஷா விருந்து அளிக்க உள்ளதாக அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது என்றும், மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு விருந்து அளிக்கிறார் அமித்ஷா என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக வாக்களிப்புக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாயின. அதில் பாஜக பெரும்பான்மை பெறும் என்று கூறப்பட்டிருந்தது. பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுவதால் பாஜக கூட்டணியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்!
அதே நேரம் தமிழகத்தில், தேஜகூ., பெரிய அளவில் வெற்றி பெறாது என்றும், திமுக., கூட்டணிக்கே வாய்ப்புகள் அதிகம் என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானதால், அதிமுக. வட்டாரம் சோர்வடைந்தது. இருப்பினும், கருத்துக் கணிப்புகளை தாம் நம்புவதில்லை என்று முதல்வர் கூறிவிட்டார்.
இருப்பினும், நாடாளுமன்ற இடங்களை விட, சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற 22 இடங்கள்தான் இப்போதைக்கு அதிமுக.,வுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், முதல்வர் அதிலேயே குறியாக உள்ளார் என்று கூறப் படுகிறது. ஒருவேளை சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக.,வுக்கு தேவைப்படும் இடங்கள் கிடைக்காமல் போனால், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் தில்லியில் விவாதிக்கக் கூடும் என்று கூறப் படுகிறது.