சினிமா உலகில் தனி ரசிகர் வட்டம் கொண்டவர் பாப்புலர் பவர்ஸ்டார் சீனிவாசன். தொடக்க காலத்தில் சமூக வலைத்தளங்களில் மிகவும் பாப்புலர் மேனாக வலம் வந்தவர். பின்னாளில் சினிமாக்களில் நடித்து, ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டார். நிதி முறைகேடுகள் கொடுக்கல் வாங்கல் தகராறுகளில் சிக்கிக் கொண்டு அவதிப் பட்டவருக்கு, தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது போலும்!
17வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுதும் பெரும் பரபரப்பு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்தத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில், தேசிய அளவில் பாஜக., மீண்டும் ஆட்சியமைக்க தேவையான இடங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் தென் சென்னை மக்களவை தொகுதியில் குடியரசு தேசியக் கட்சி சார்பில் பவர் ஸ்டார் சீனிவாசன் போட்டியிட்டார்.
தென் சென்னை தொகுதி ஸ்டார் தொகுதி அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. அதற்குக் காரணம் பவர் ஸ்டார் அல்ல, அதிமுக., திமுக., வேட்பாளர்கள்.
அதிமுக வேட்பாளராக அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன், திமுக வேட்பாளராக தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் போட்டியிட்டனர்.
திரையில் ரசிகர்களை சிரிக்க வைத்த பவர் ஸ்டார் தேர்தல் களத்திலும் முத்திரை பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். ஆனால், தென் சென்னையில் அவர் தற்போது வரை பெற்றுள்ள வாக்குகள் 641.
இதில் தபால் வாக்கு 5, ஈவிஎம்., 636! இதனால் பவர் ஸ்டாருக்கு டெபாசிட் கூட கிடைக்காது. இருந்தாலும் தேர்தலில் போட்டியிடும் ஒரு ஜாலியான அனுபவத்தை அவர் பெற்றுவிட்டார் என்கிறார்கள் ரசிகர்கள்>