தமிழகத்தின் கௌரவம், தமிழ் மரபின் அடையாளமான மாமன்னன் ராஜராஜ சோழனைப் பற்றி அவதூறாகவும் அசிங்கப் படுத்தியும் மிகக் கேவலமாகவும் பேசி, சாதி மோதலுக்கும் சமூகப் பதற்றத்துக்கு வித்திட்டுள்ள இயக்குநர் பா.ரஞ்சித் மீது பல்வேறு இடங்களில் புகார்கள் பதிவு செய்யப் பட்டு வருகின்றன. இந்நிலையில், முன் ஜாமின் கோரி பா.ரஞ்சித் தரப்பில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, வரும்19-ஆம் தேதி வரை அவரை கைது செய்யக்கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாரம்பரியத்தின் அடையாளமான மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து தரக் குறைவாகவும் அவதூறு கிளப்பும் வகையிலும் பேசிய வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ’தனது சாதியை மட்டுமே முன்னிறுத்தி வெறும் நான்கு சினிமாக்களை இயக்கி டப்பாவுக்குள் முடங்கிப் போகச் செய்துவிட்ட’ பா.ரஞ்சித், உலகின் பெரும் பகுதியில் தமிழ் மரபின் வெற்றிக் கொடியை நாட்டி, தமிழர் கலாசாரத்தைப் பரப்பிய தமிழ் மரபின் மாமன்னர் ராஜராஜ சோழனை தரக் குறைவாக விமர்சித்தார்.
தலித்களின் நிலத்தைப் பறித்தவர் ராஜராஜ சோழன்; தேவதாசிகளை ஏற்படுத்தி பல பெண்களை நாசம் செய்தவர் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசினார். அவரது பேச்சு, அவரைப் பின்னிருந்து ஏதோ சக்திகள் இயக்கியது போன்று தெரிந்தது என்று பலரும் பா.ரஞ்சித்தை சாடி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து சாதி மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள், கும்பகோணம் ஆகிய நகர காவல் நிலையங்களிலும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பல்வேறு இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டு வருவதால், கைது நடவடிக்கைக்கு பயந்து இயக்குநர் ரஞ்சித் முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நேற்று மனு தாக்கல் செய்தார்!
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கும் போது மக்கள் போற்றும் மன்னரைப் பற்றி பேசியது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ரஞ்சித் தனது பேச்சு எந்த சமூகத்திலும் பிளவை ஏற்படுத்தும் வகையில் இல்லை என்றும், பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் கூறியிருப்பதையே தானும் குறிப்பிட்டதாகவும், தனது பேச்சு சமூக வலைதளங்களில் தவறாக சித்திரிக்கப்படுகிறது என்றும் கூறினார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி, புகழ்பெற்ற மன்னர் ராஜராஜ சோழன் குறித்து பேசியதை தவிர்த்திருக்க வேண்டும், அரசியல் செய்ய எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மன்னர் குறித்து பேசியது தவறு! ஜாதி மத பேதமின்றி ராஜராஜ சோழன் போற்றப்பட்டு வருகிறார். மன்னர் ராஜராஜ சோழன் காலம் தமிழகத்தின் கட்டடக் கலைக்கு சான்றாக அமைந்த காலம் என்று கூறினார்.
இந்நிலையில் இயக்குநர் ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ரஞ்சித் மீது புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே அவரிடம் விசாரிக்க வேண்டும் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றது அரசு.
இதை அடுத்து வழக்கு தொடர்பாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
ரஞ்சித்தை புதன்கிழமை வரை கைது செய்ய மாட்டோம் என அரசுத் தரப்பு உத்தரவாதத்தைப் பெற்ற நீதிமனறம், வரும் 19ஆம் தேதி வரை ரஞ்சித்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தது.
இதை அடுத்து, வரும் 19-ஆம் தேதி திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.