தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி,தேனி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றாலைகள் அதிகம் உள்ளன. இந்த காற்றாலைகள் 3,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
இந்நிலையில் தென்திசை காற்றால் தமிழகத்தில் காற்றாலை மூலம் செய்யப்படும் மின்னுற்பத்தி 3000 மெகாவாட் அளவை எட்டியுள்ளது
தற்போது கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக தென் மாவட்டங்களில் அதிகளவில் காற்று வீசுகிறது. இதனால் நெல்லை மாவட்டங்களில் காவல்கிணறு, முப்பந்தல், அஞ்சுகிராமம், இருக்கன்துறை உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தகவல் தெரிகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மேற்கு, தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசுவதால் காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காலை 11 மணி முதல் மாலை 4 மணிக்குள் அதிகபட்ச மின் உற்பத்தி கிடைத்து விடுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் நீர்மின் நிலையங்கள் மூலம் நமக்கு மின்சாரம் கிடைக்காத இந்த சூழலில், காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகம் கிடைப்பது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் தினசரி சராசரி மின்தேவை 14,000 மெகாவாட்டிற்கும் மேல் உள்ளது. இதில் குறிப்பிட்ட சதவீத மின்தேவை காற்றாலை மின் உற்பத்தி மூலமே பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
காற்றாலை நிறுவங்கள் விற்பனை செய்யும் மின்சாரத்தை, மின்வாரியம் பணம் கொடுத்து வாங்கி நுகர்வோருக்கு அளிக்கிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன் நாள்தோறும் 800 மெகாவாட் அளவிற்கு மட்டுமே காற்றாலை மின்உற்பத்தியானது.
பின்னர் அதிகரித்த காற்று வீச்சு காரணமாக காற்றாலை மின்னுற்பத்தி படிப்படியாக அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில் வீசும் காற்றின் வேகம் அதிகரித்து வந்ததால், மின்சார உற்பத்தி உச்சக்கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தான் தற்போது 3,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சாரம் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.