சென்னை: அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப் பட்டது. இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிமன்றம் கூறியது.
காஞ்சி அத்தி வரதர் வைபவம் வரும் ஆக.17ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் நடை பெற்று வரும் இந்த வைபவம் குறுகிய நாட்கள் என்பதால், லட்சக்கணக்கிலான பக்தர்கள் குறுகிய நாட்களுக்குள் வந்து தரிசித்து விட முண்டியடிப்பதாலும் தொடக்கம் முதலே ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று லட்சத்துக்கும் மேல் அன்பர்கள் வந்தனர்.
சயனக் கோலத்தில் அருள் பாலித்த அத்திவரதர் தற்போது நின்ற கோலத்தில் அருள்கிறார். இதனால் வரதரின் தரிசனத்தை காண வேண்டும் என்பதற்காக பக்தர்கள் முண்டியடித்து வருவதால், காஞ்சிபுரமே கதிகலங்கிப் போயுள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் சரிவர ஏற்பாடுகள் செய்ய இயலாமல் திக்கித் திணறி, கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
இந்நிலையில், எப்போதுதான் இந்த வைபவம் நிறைவுறுமோ என்று பெருமூச்சு விடும் அளவுக்கு மாவட்ட ஆட்சியர் கருத்துகளைக் கூறி வருகிறார். இதனால் வரும் 16ஆம் தேதியோடு ஏற்கெனவே திட்டமிட்டபடி, அத்திவரதர் தரிசனம் முடிகிறது என்றும், அனந்தசரஸ் குளத்திற்கு அத்தி வரதரை எடுத்துச் செல்ல, 17ஆம் தேதி ஏற்பாடு செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இந்நிலையில், பக்தர்கள் படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபாகரன் என்பவர் முறையீடு செய்தார்.
அத்திவரதர் வைபவம் முடிவடைய குறைவான நாட்களே உள்ள நிலையில் லட்சகணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வதாலும், இன்னும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வேண்டியுள்ளதாலும், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என
முறையிட்டார்.
அவரது முறையீட்டைக் கேட்ட நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, இதனை ஒரு மனுவாக தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறியது.