சந்தேஷ் ஆப் (வாட்ஸ்அப் போன்ற மெசஞ்சர் பயன்பாடு) செயலி குறித்த செய்தியைத் தொடர்ந்து, இப்போது இந்திய அரசு பரிந்துரை செய்யும் மற்றொரு செயலி “சம்வாத்” என்ற ஒரு மெசஞ்சர் செயலியின் பயன்பாட்டை சோதனை செய்து பார்த்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஆப் குறித்து விரைவில் அரசு அறிவிக்கும் என்றும், இந்த ஆப் பொது மக்கள் பயன்பாட்டுக்கு விரைவாக வெளியிட ஆர்வமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது சந்தேஷ், சம்வாத் என்ற இந்த இரண்டு ஆப்களின் பயன்பாடுகளும் பீட்டா சோதனை கட்டத்தில் உள்ளன. ஐஓஸ் பதிப்பு மற்றும் “சந்தேஷ்” இன் ஆண்ட்ராய்டு பதிப்பு ஏற்கெனவே பீட்டா சோதனை மட்டத்தில் கிடைத்தாலும், இந்த ஆப் பயன்பாடு பொதுமக்கள் பயன்படுத்தும் பீட்டா சோதனைக்காக இன்னும் வெளியிடப்படவில்லை! தற்போது டெலிமாடிக்ஸ் டெவலப்மெண்ட் செண்டரில் (சி-டாட்) அதிகாரிகளால் சோதிக்கப்பட்டு வருகிறது. இது எப்போது பொது பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் என்பது குறித்து இன்னமும் தெரிவிக்கப் படவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் முதல், வாட்ஸ் அப் வெளியிட்ட புதிய தனியுரிமைக் கொள்கையின் காரணமாக வாட்ஸ்அப்பின் பயனர்கள் கோபமடைந்து இதன் உடனடி பயன்பாட்டிலிருந்து விலகிச் சென்றனர்! வாட்ஸ்அப் நிறுவனத்தால், இந்த புதிய தனியுரிமைக் கொள்கை பிப்ரவரி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது, ஆனால் கடும் எதிர்ப்புகளின் காரணமாக, இப்போது மே 15 வரை இந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான வாட்ஸ் அப் பயனர்கள் ஏற்கெனவே பிற செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தாலும், மெசேஜிங் பயன்பாடுகள் மற்றும் வசதிகள் பலவற்றை அளிக்கும் வாட்ஸ்அப் நிறுவனம், தனது புதிய தனியுரிமைக் கொள்கையை மே 15 முதல் செயல்படுத்தும் என்பதில் இன்னமும் உறுதியாக இருக்கிறது. மேலும், இந்தப் புதிய தனியுரிமைக் கொள்கைக்கு ஒப்புக் கொள்ளாதவர்கள், வாட்ஸ்அப் பயன்பாட்டை இழக்க நேரிடும் என்றும் மீண்டும் புதிதாகத் தொடங்க வேண்டும் என்றும் கூறியது.
வாட்ஸ்அப் பயனர் தளங்களில், இந்தியா மிகப்பெரிய இடத்தைக் கொண்டிருக்கிறது. தற்போது, இந்திய அரசால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட சந்தேஷ் மற்றும் சம்வாத் போன்ற செயலிகளின் பயன்பாடுகளை அறிமுகப்படுத்துவது பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப்பை பெரிதும் பாதிக்கும் என்று கூறப் படுகிறது.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஆப்கள் / மென்பொருட்களுக்கான ஆதரவுக் குரல்கள் அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ்அப்பின் இந்த நடவடிக்கை நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தும். தனியுரிமைக் கொள்கை தொடர்பாக தில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு சட்டப் போர் நடைபெறுகிறது என்பதையும் அவர்கள் அளிக்கும் பதில் நிலுவையில் உள்ளது என்பதையும் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்கின்றனர் பயனர்கள்.
2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மேலும் ஒரு சந்தேஷ் ஆப் குறித்து பயனர்கள் குழப்பம் அடையக்கூடாது! அது அரசு ஊழியர்களுக்கானதாக இருந்தது.