- கட்டுரை: ஜெயஸ்ரீ. எம். சாரி
பல முக்கிய நாட்களை தன்னில் கொண்டுள்ள மே மாதத்தின் மற்றொரு பொன்னான நாள் இன்று. மே 11-ஆம் தேதி. தேசிய தொழில்நுட்ப தினமாக நாம் கொண்டாடுகிறோம்.
23 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1998- ஆம் வருடம், மே 11-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி இந்திய அரசு அண்டை நாடுகளை நடுங்க வைத்தது. வெற்றிகரமான இந்த நிகழ்வின் மூலம் இந்தியா, உலகின் அணு ஆயுத நாடுகள் பட்டியலில் தன்னையும் பெருமிதத்துடன் இணைத்துக் கொண்டது. இந்த நிகழ்வை நினைவு கூறும் நாளே தேசிய தொழில்நுட்ப தினம்.
வளர்ந்து வரும் நாடாக இருக்கும் நம் தாய்நாடு, தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சியை கண்டு வருகின்றது. அறிவியலை மூலாதாரமாகக் கொண்டு பலவித தொழில்நுட்பங்களின் மூலமாக நம் நாட்டு மக்களுக்கு பல உதவிகள் செய்யப்படுகின்றன.
அறிவியல் ஆராய்ச்சியாளரகள், விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளினாலும், முயற்சிகளினாலும் நம் பாரதம் மிளிர்கிறது. மிகக் குறுகிய காலத்திலேயே கொரானாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்தும், பல நாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்தும் தன் தொழில்நுட்பத்தினாள் இன்றைய இக்கட்டான சூழ்நிலையிலும் மிளிர்கிறாள், நம் பாரத அன்னை.
தொழில்நுட்ப துறையில் நம் நாடு சிறந்து விளங்க நாம் அற்புதமான அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், ஆராய்ச்சிகளின் முடிவுகளை தொழில்நுட்பத்துடன் செபல்படுத்த வேண்டும். அதே சமயத்தில் தொய்வில்லாமல் விஞ்ஞானிகளை உருவாக்கம் செயவதிலும் கவனம் செலுத்தும் கட்டாய சூழ்நிலையும் ஏற்படுகிறது என்பதே நிதர்சனம்.
விஞ்ஞானிகள் உருவாக்கம் என்பதும் ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ செய்யும் செயல் அல்ல. மாணவர்களுக்கு பள்ளிப்படிப்பிலிருந்தே அறிவியல் சம்பந்தமான கல்வியை அளிக்க வேண்டியுள்ளது. தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அறிவியல் சார்ந்த கண்ணோட்டத்தோடு அணுகும் தன்மையை மாணவர்களுக்கு அறிவுறுத்துவதும், உற்சாகப்படித்துவதும் இன்றியமையாததாகிறது.
நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வருடந்தோறும் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்படும் அறிவியல் கண்காட்சியில் உற்சாகமாக பங்கேற்கின்றனர். அவர்களே, மேல்நிலை வகுப்புகளில் வரும் போது அவர்களிடம் கொஞ்சம் ஆர்வம் குறைந்து விடுகிறதோ என்னும் அச்சமும் கூடவே வருகிறது.
நம் இந்திய அரசும் பல கோடி ரூபாய் நிதித்தொகையை அறிவியலும், தொழில்நுட்பமும் பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் பட்டயப்படிப்பிற்காகவும், பட்டப்படிப்புக்காகவும், பட்ட மேற்படிக்காகவும், ஆராய்ச்சிக்களுக்காகவும் செலவு செய்கின்றது.
அவ்வாறு செய்யப்படும் நிதியின் சுமையை நம் நாட்டின் கடைக்கோடி ஏழையும் கூட சுமக்க வேண்டியுள்ளது. அறிவியலை படித்தவர்கள், தொழில் நுட்பத்தை கற்றவர்கள் தான் கற்றவற்றை, தனக்கு கல்வி வாய்ப்பைக் கொடுத்த சமுதாயத்திற்காக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நற்சமுதாயம் ஏற்படச் செய்யும் பொறுப்பு உள்ளது என்பதே உண்மை.
அத்துடன் நின்றுவிடாமல் இளைய பாரதத்திற்கும் அவர்கள் தங்களாலான உதவிகளை செய்வதும் அவர்களின் முன்னால் இருக்கும் ஒரு அறைகூவல். ஒரு சிறிய கதையொன்று நினைவுக்கு வருகிறது.
ஒரு பாலைவனத்தில் ஒரு மனிதன் பல தூரங்கள் கடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு மிகவும் தாகம் எடுத்தது. அதனால், அவன் இங்குமங்கும் தண்ணீர் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு ஒரு அடிபம்பு தெரிந்தது. அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய காகிதத் துண்டு வைக்கப் பட்டிருந்தது.
அதில் நீங்கள் பக்கத்தில் உள்ள பாட்டிலில் இருக்கும் தண்ணீரை இந்த அடி பம்பில் விட்டு பின்னர் அதை உபயோகித்தால் உங்களுக்கு தண்ணீர் வரும் என்று எழுதி இருந்தது. ஆனால், அவனுக்கு சிறிது சந்தேகம் வந்தது. நிஜமாகவே இதற்குள் தண்ணீரை விட்டால் நமக்கு தண்ணீர் வருமா என்று. பின்னர் முயன்று பார்ப்போம் என்று பாட்டிலில் இருந்த தண்ணீரை அடி பம்பில் விட்டு அந்த அடிபம்பை அடிக்க ஆரம்பித்தான்.
உண்மையாகவே நிறைய தண்ணீர் வந்து அவன் தாகம் தணிந்தது. அவன் அங்கிருந்து செல்லும் முன் மறக்காமல் அதே பாட்டிலில் தண்ணீரையும் நிரப்பி அந்தச் சீட்டிலேயே இந்த யுக்தி வேலை செய்கிறது என்றும் எழுதி விட்டு வந்தான்.
அதன் மூலம் அவனுக்குப் பிறகு பாலைவனத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் என்று அவன் விரும்பினான். அவ்வாறே, பெற்றோர்களும், ஆசிரியர்களும், அறிவியல் வல்லுநர்களும், விஞ்ஞானிகளும் மாணவர்களுக்கு சிறப்பாய் வழிகாட்டி, நல்லதே விளைவிக்கும் தொழில்நுட்பத்தை கற்க, பயிற்சிப் பெற, ஆராய்ச்சிகளில் உற்சாகப்படுத்தினால் பல நோபல் பரிசுகள் நம் பாரதத்தை தேடி வரும் என்பது உண்மையாகும்.