சென்னை:
ஜியோவை மிஞ்சும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் டேட்டா சலுகையை அள்ளி விடுகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தில், அன்லிமிடட் காலிங், 30 ஜிபி டேட்டா சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் பல. ஐடியா, ஏர்டெல், வோடஃபோன், ஏர்செல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் சந்தையில் தள்ளாடி வருகின்றன. ஆயினும் தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோவுடன் கடுமையாக போட்டி போட்டுக் கொண்டுள்ளது. இந்தப் போட்டியில் ஜியோவை மிஞ்சும் அளவுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ரூ. 399 க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடட் காலிங் வசதி, 30 ஜிபி டேட்டா ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மார்ச். 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஜியோவின் ரூ.409 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 20 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. இருப்பினும், ஜியோ 4ஜி டேடாவிலும், பிஎஸ்என்எல் 3ஜி டேடா வேகத்திலும் உள்ளது என்று வாடிக்கையாளர்கள் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் 4ஜி வேகம் எல்லா இடங்களிலும் இல்லை என்றும் பிஎஸ்என்எல் பயன்படுத்துவர்கள் கூறுகின்றனர்.
வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள, ரீசார்ஜ் திட்டங்களில் டேட்டா ஆஃபர்கள், கிஃப்ட் வவுச்சர்கள், ஷாப்பிங் கூப்பன்கள் என டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு ஆஃபர்களை அள்ளித் தருகின்றன.