சென்னை: இஸ்ரோ வடிவமைத்துள்ல ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு நிலை நிறுத்தப் பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தகவல் தொடர்புக்காகவும், பருவநிலை மாற்றம் அறியவும் ஜிசாட்- 6ஏ என்னும் நவீன செயற்கைக்கோளை வடிவமைத்தது. இதை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து வியாழக்கிழமை இன்று மாலை 4.56க்கு ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ரக ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.
ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ரக ராக்கெட் 49.1 மீட்டர் உயரமும், 415.6 டன் எடையும் கொண்டது. இதில் 2,140 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 6ஏ செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப் பட்டுள்ளது. இது புவியில் இருந்து அதிகபட்சம் 36 ஆயிரம் கி.மீ. தொலைவும், குறைந்தபட்சம் 170 கி.மீ., தொலைவும் கொண்ட சுற்றுப் பாதையில் புவியைச் சுற்றிவரும். ஜிசாட்- 6ஏ செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
ஆமதாபாத்தில் உள்ள இஸ்ரோ மையத்தில் ‘எஸ்.பேண்ட்’ தகவல் தொடர்பு வசதிக்காக 6 மீட்டர் விட்டத்தில் மிகப் பெரிய ‘ஆன்டெனா’ ஒன்றும் தயாரிக்கப்பட்டு செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டுள்ளது. இஸ்ரோ தயாரித்த மிகப் பெரிய ‘ஆன்டெனா’ இது. தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள இந்த செயற்கைக் கோள் பேருதவியாக அமையும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.