புது தில்லி: இந்தியாவில் 2100 Mhz பேன்ட் மூலம் 4ஜி சேவைகளை வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மத்திய டெலிகாம் துறை ஒப்புதல் அளித்துள்ளது. 4ஜி சேவைகளை வழங்க ரூ.13,885 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரமை கைப்பற்ற விரிவான அறிக்கை 2017-ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசு சார்பில் முதலீடாக ரூ.6,652 கோடி பிஎஸ்என்எல்., நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் ஸ்பெக்ட்ரம் கட்டணம் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளில் இருந்து 16 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது. இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவன தலைவர் அனுபம் ஸ்ரீவத்ஸவா கூறியபோது, “2100 Mhz பேன்ட் மூலம் 4ஜி சேவைகளை வழங்குவதற்கு எங்களின் கோரிக்கைக்கு மத்திய டெலிகாம் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் அதிவேக 4ஜி எல்.டி.இ. சேவை வழங்க முடியும்.” என்றார்.
இந்தியாவில் மற்ற டெலிகாம் நிறுவனங்களில் பிஎஸ்என்எல். மட்டும்தான் இதுவரை 4ஜி சேவையை வழங்காமல் உள்ளது. அடுத்து 5ஜி சேவைக்கு மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் போட்டியிடும் சூழலில், தற்போதுதான் பிஎஸ் என்எல்லுக்கு இந்த சேவைக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. தற்போது 3ஜி சேவையில் மிகவும் மலிவானது என்ற போட்டியில் பிஎஸ் என் எல் நிறுவனம்தான் உள்ளது. 4ஜி சேவையில் கால் பதிக்க அனுமதி கிடைத்திருக்கும் நிலையில் பி.எஸ்.என்.எல். வழங்கும் சலுகைகள் சந்தையில் போட்டியை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி சேவைகளை 21 வட்டாரங்களில் விரைவில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே 4ஜி சேவை கேரள கர்நாடக மாநிலங்களில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.