சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில், பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித் குழுவின் ஏர் டாக்ஸி பலரையும் ஈர்த்தது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடிகர் அஜித்தை தொழில்நுட்ப வழிகாட்டியாகக் கொண்டு தக்ஷா மாணவர் குழு சில ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது. இந்தக் குழு, இந்தியாவில் முதல் முறையாக ட்ரோன் – வானில் பறக்கும் ஏர் டாக்சியை தயாரித்துள்ளது. இந்த ஏர் டாக்சி மூலம் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளை போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவாகக் கொண்டு செல்ல முடியும். உடல் உறுப்பு தானத்துக்கு உதவும் வகையிலும் இந்த ஏர் ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
80 கிலோ எடை கொண்ட மனிதர்களை இந்த விமானத்தில் தூக்கிச் செல்ல முடியும். இந்த விமானம் தற்போது சென்னையிலிருந்து வேலூர் வரை பறக்கும் சக்தி கொண்டதாக உள்ளது. 20 கி.மீ., சுற்றளவில் எளிதாகப் பறந்து செல்லும் இந்த ஏர் ஆம்புலன்சை, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழக அரசு சார்பில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பார்வைக்காக வைத்திருந்தனர். இது, முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.