இது ஆண்ட்ராய்ட் ஆப்களின் உலகம். எல்லாவற்றுக்கும் அவரவர் ஆண்ட்ராய்ட் ஆப்களை உருவாக்கி அதில் இந்த உலகை எதிர்கொள்கிறார்கள்.
ஜனநாயக நாட்டில் மிக முக்கியமான தேர்தல் திருவிழாவில் வாக்களிக்கும் வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பயன்பெறும் வகையில் தேர்தல் ஆணையமும் ஒரு ஆண்ட்ராய்ட் ஆப்பினை வெளியிட்டுள்ளது. இந்த செயலி இப்போது பலரது போன்களிலும் நிறுவப் பட்டு வருகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டால் பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்கும் வகையில் CVigil என்ற ஆன்ட்ராய்டு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீதோ, கட்சிகளின் மீதோ இந்த செயலி வாயிலாக புகார் அளிக்கலாம்.
புகார் அளிக்கப்பட்டு ஒன்றரை மணி நேரத்திற்குள் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புகார் அளித்தவரிடம் தெரிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
VOTER HELPLINE MOBILE APP எனப்படும் செயலியின் மூலம் வாக்காளர் பெயர் சரிபார்த்தல், புதிய வாக்காளர் சேர்க்கை, தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்புகள் ஆகியவற்றை எளிதில் அறியமுடிகிறது.
SUVIDHA செயலி மூலம் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்கள் அங்கீகரிக்கப்பட்டனவா என அறிய முடிகிறது.
வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான பரிந்துரைகள், புகார்கள் அளிக்க ‘சமாதான்’ என்ற செயலியை பயன்படுத்தலாம் என்று ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த செயலி மூலம் புகார்கள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
வாக்காளர்கள் இலவச அழைப்பு எண்ணான 1950 ஐ பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
தேர்தல் நடைபெறும் போது வாக்குச் சாவடிகளின் நிலவரங்கள் உடனுடன் தேர்தல் ஆணையத்திற்கு ELECTION MONITORING DASHBOARD என்ற இணையம் வழியாக பதிவிடப்படுகின்றன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில், பல மாநிலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சுழற்சி முறையை கணினி சார்ந்த நெறிமுறையை கொண்டு தேர்தல் ஆணையம் எளிதாகச் செய்கிறது.
தேர்தலின் போது பயன்படுத்தப்படும் வாகனங்களின் தரவுகளை நிர்வகிக்க SUGAM என்ற இணையத்தை ஆணையம் பயன்படுத்துகிறது.
அரசியல் கட்சிகள் பரப்புரைகள் செய்வதற்கான அனுமதியை SUVIDHA என்ற இணையதளம் வாயிலாகவும் பெறலாம்.