சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
107. உலகம் வசப்படுவது எப்படி?
ஸ்லோகம்:
க்ஷமயா தயயா ப்ரேம்ணா சூன்ருதேனார்ஜவேன ச |
வசீகுர்யாத் ஜகத்சர்வம் வினயேன ச சேவயா ||
– சாணக்கிய நீதி.
பொருள்:
பொறுமை, கருணை, அன்பு, உண்மை பேசுவது, நேர்மை பணிவு, சேவை மனப்பான்மை இந்த குணங்கள் இருந்தால் உலகமே நமக்கு வசப்படும்.
விளக்கம்:
எந்தெந்த சாத்வீக குணங்கள் மூலம் உலகம் நமக்கு வசமாகும் சக்தி கிடைக்கும் என்பதை கூறும் சுலோகம் இது. இந்த குணங்கள் மிகச் சிலரிடமே இருக்கும்.
பிறர் பாராட்டைப் பெற வேண்டுமென்றால் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நற்குணங்கள் இருக்க வேண்டும். நாம் எந்த தொழில் செய்தாலும் முதலில் தேவையானது நம்மைச் சுற்றியுள்ளவரின் பாராட்டைப் பெறுவது. காலையில் எழுந்ததும் நினைக்க வேண்டிய ‘ப்ராத ஸ்மரணீயர்கள்’ துருவன், பிரகலாதன், நசிகேதன், கசன் போன்றவர்கள் இந்த நற்குணங்கள் மூலம்தான் தம் சமகாலத்திலேயே பொது மக்களின் பாராட்டைப் பெற்றார்கள். நினைத்த இலக்கைச் சாதித்தார்கள்.
நவீன யுகத்தில் கூட சத்ரபதி சிவாஜி, சுவாமி விவேகாநந்தர் மற்றும் தீனதயாள் உபாத்தியாயா, யோகி அரவிந்தர், திலக், சர்தார் பட்டேல் போன்றோர் மற்றும் இன்றைய நரேந்திரமோடி போன்றோர் இந்த நற்குணங்களால் மக்களின் இதயங்களில் இடம் பெற்றுள்ளார்கள். நினைத்த இலக்கை சாதித்துள்ளார்கள்.
இந்த சாத்வீக நற்குணங்களை வளர்த்துக் கொண்டு அனைவரின் உள்ளங்களையும் வெல்ல வேண்டும் என்ற கருத்தை அளிக்கும் ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று.