இந்தியா மீது பாகிஸ்தான் ஒரு அணுகுண்டை வீசினால், பதிலுக்கு இந்தியா 20 அணுகுண்டுகளைப் போட்டு நம்மை ஒட்டுமொத்தமாக அழித்து விடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசினார் முஷாரப். அப்போது அவர், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவு மீண்டும் ஒரு அபாயகரமான நிலையை எட்டியிருக்கிறது. இப்போது அணு ஆயுதப் போர் வராது. ஆயினும் நாம் ஒரு அணு குண்டை இந்தியா மீது போட்டால், அது நம்மை 20 அணு குண்டுகளால் தாக்கி ஒன்றுமே இல்லாமல் செய்து விடும். இதற்கு ஒரே வழி என்ன என்றால், முதலிலேயே நாம் முழு பலத்துடன் ஒரே நேரத்தில் 50 அணுகுண்டுகளை இந்தியா மீது வீசித் தாக்க வேண்டும், அப்போது தான் இந்தியாவால் 20 அணுகுண்டுகளுடன் பாகிஸ்தானை திருப்பித் தாக்க முடியாது! எனவே, நீங்கள் 50 அணுகுண்டுகளுடன் முதலில் தாக்குதல் தொடுக்க தயாராக இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
காஷ்மீரில் புல்வாமோ தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய சிஆர்பிஎஃப் வீர்ர்கள் வீரமரணம் அடைந்து ஒருவாரம் கடந்த நிலையில், முஷாரப் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவுடன் இஸ்ரேல் பூண்டிருக்கும் நட்பு மிகவும் அபாயகரமானது என்றும், நாம் மிக எளிதில் இந்திய இஸ்ரேல் நட்புறவை துண்டிக்கச் செய்ய முடியும் என்றும், இஸ்ரேல்கூட பாகிஸ்தானுடன் நட்பு கொள்ளவே விரும்புகிறது என்றும் கூறினார் முஷாரப்.
மேலும், பாகிஸ்தானில் அரசியல் சூழல் சாதகமாகும் போது தாம் நாடு திரும்பத் தயார் என்றும், அங்கே இருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் என்னுடையவர்கள், நீதித் துறை அமைச்சர், அரசு வழக்கறிஞர் ஆகியோர் எனது வழக்குரைஞர்கள் என்றும் கூறினார் முஷாரப்.
“If Pakistan Will Attack With One Atomic Bomb, India Could Finish Us By Attacking With 20 Bombs”, Says Former Pak President Pervez Musharraf