மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் பலத்த மழை எதிரொலியாக குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பொது ஊரடங்கால் வழக்கம் போல சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளதால், தற்போதைய வெள்ளப் பெருக்கால் புதிதாக தடை ஏதும் பிறப்பிக்கப் படவில்லை!
திருக்குற்றால மலையின் நீர்பிடிப்புப் பகுதியில், தொடர் சாரல் மழை எதிரொலியாக, குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் விடிய விடிய பரவலாக சாரல் மழை பெய்தது. குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இன்று காலை மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள தால் குற்றாலம், ஐந்தருவி பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் விட்டுவிட்டு சாரல் மழை தொடர்ந்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது . குளுகுளு நிலமையும் நீடித்து வருகிறது .
கடந்த 2 மாதங்களுக்கு முன்பே குற்றாலத்தில் சீஸன் சூழ்நிலை தொடங்கியது. ஆனால், அண்மைக் காலமாக மழையோ சாரலோ இல்லாமல் வெறிச்சிட்டுக் கிடந்தது. இந்த நிலையில் சூழல் மாறி, கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இருப்பினும் கனமழை பெய்தால்தான் குளங்கள் நிரம்பும் என்பதால், விவசாயிகள் ஏக்கத்துடன் உள்ளனர்.